Monday, August 29, 2011

அடியாள் - ஓர் அரசியல் அடியாளின் அதிரவைக்கும் வாக்குமூலம்...

படித்ததில் பிடித்தது-PART-1
நண்பர்களே நான் படித்து,கேட்டு,பார்த்து பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு,படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

அடியாள்-ஓர் அரசியல் அடியாளின் அதிரவைக்கும் வாக்குமூலம்...
எழுத்தாளர்-ஜோதி நரசிம்மன்.
பதிப்பாளர்-கிழக்கு பதிப்பகம்.
விலை-70/-Rs

இரு முறை சிறை சென்று மீண்டவரின் உலுக்கியெடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.அடியாள் கூட்டம்,சிறை அதிகாரிகள்,காவல் துறையினர்,கைதிகள் இவர்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாக சிதறப்போகிறது எச்சரிக்கை.இந்த புத்தகத்தின் அட்டை பக்கத்தில் அச்சிடப்பட்ட வரிகள் இவை."ஆம் உண்மைதான்" இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.

விழுப்புரத்தில் தொடங்கும் கதை மெல்ல நகர்ந்து,நிறைய ஊர்களை சுற்றி இறுதியில் ஒரு நல்ல சமுதாயக் கருத்தோடு முடிகிற உருக்கமான உண்மை சம்பவம் தான் இந்த அடியாள்.தனி மனிதன் நல்லவன்,கும்பல் மோசமானது.ரௌடிசத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நம் ஹீரோ அப்படி ஒரு கும்பலில் சேருகிறார்.சண்டை,கட்டப்பஞ்சாயத்து இப்படி பலவற்றை செய்யும் நம் ஹீரோ சிறை செல்கிறார் ஒருமுறை அல்ல இரு முறை.முதல் முறை அடியாளாக.இரண்டாவது முறை ஏன் என்பதை புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்துகொள்ளுங்கள்.முதல் முறை சென்றதற்க்கும்,இரண்டாம் முறை சென்றதற்க்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன.எவ்வளவு மாற்றங்கள் என்பதையும்,அங்கு அவர் படும் கஷ்டங்கள்,அவர் மட்டுமல்ல பொதுவாக சிறை செல்லும் அனைவரும் உள்ளே என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்?.உண்மையில் சிறை என்பது என்ன?.அங்கு நடக்கும் தகிடு தத்தங்கள்,குற்றங்கள்,தான் சந்திக்கும் சில நல்ல உள்ளங்களின் கதைகள் இப்படி அனைத்தைப் பற்றியும் மிகத்துணிவுடனும்,தெளிவுடனும்,எதையும்,யாரை பற்றியும் கவலைபடாமல் போட்டு உடைதிருக்கிறார் நம் ஹீரோ ஜோதி நரசிம்மன்.

கடலூர் மற்றும் புழல் சிறைகளை பற்றியும்,லாக்கப்பிற்க்கும்,ஜெயிலுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதையும்,சிறையில் எத்தனை வகைகள் உள்ளது எனவும் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்.உள்ளே செல்லும் அனைவரையும் நிர்வாணப்படுத்தியே அடையாளங்களை குறித்துகொள்கிறார்கள்.அரைஞான் கயிறு கூட இல்லாமல் தான் உள்ளே அனுப்புகிறார்கள்.சிறையில் குழுவாக இருந்தால் தான் மதிப்பார்களாம்,தனியாக இருந்தால் மிரட்டப்படுவார்களாம்.குவாரண்டீ,இது 40 பேர் தங்கும் ஒரு அறை.இது மிகச்சிறிய அறை ஆனால் இதில் 40 பேர் தங்கவேண்டும்.கழிப்பறைகள் இங்கே தனித்தனியாக நம் வீட்டில் இருப்பது போல் இருக்காதாம்.இந்த அறையின் உள்ளேயே தான் கழிப்பறையும்,ஒரு மூலையில் 2 அடிக்கு 2 அடி அளவில் ஒரே ஒரு சிறிய தடுப்புசுவர் தான்.இது தான் சிறையின் உள்ளே இருக்கும் கழிப்பறை.பக்கதிலேயே 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி,காலையிலும்,மாலையிலும் மட்டுமே தண்ணீர் வருமாம்.இது தான் இந்த 40 பேருக்கும்.பெரும்பாலும் தண்ணீர் தொட்டி காலியாகத்தான் இருக்குமாம்.இரவில் சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் தான் செல்வார்களாம்,மூத்திர நாற்றம் குடலைப் புரட்டுமாம்.மாலை 6 மணிக்கு கைதிகளை எண்ணி சிறையில் அடைப்பார்கள்.அப்படி எண்ணப்படும் போது யாராவது இல்லை என்றால் அந்த அறையில் இருக்கும் மற்றவர்கள் நிலைமை அவ்வளவுதானாம்.உங்களுக்கு அவரைப் பற்றி தெரியவில்லை என்றாலும் நீங்கள் நைய்யப் புடையப்படுவது உறுதி.மறுநாள் காலை 6 மணிக்கு தான் மீண்டும் திறந்து விடுவார்களாம்.இந்த 12 மணி நேர தனிமைதான் கைதிகளை துவட்டியெடுக்கும் மிகப் பெரிய தண்டனை.சிறையின் உள்ளே கடிகாரம் கிடையாதாம்.ஒருமணிநேரத்த்றிக்கு ஒரு முறை மணி அடிப்பர்களாம் அதை வைத்து தான் நேரத்தை கணித்துக்கொள்ளவேண்டுமாம்.காலை 7 மணிக்கு மணி அடித்தவுடன் போய் வரிசையில் நிற்க்கவேண்டுமாம்.கஞ்சி தான் காலை உணவு,ஆளுக்கு 1/2 லிட்டர் தான்.அதுவும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது.40 பேர் இருக்கும் அறையில் 30 தட்டுகள் தான்.அப்படியே கிடைத்தாலும் அது எப்படி பட்ட கஞ்சி தெரியுமா புழு பூத்த கஞ்சி.புழு செத்துகிடப்பதெல்லாம் சர்வ சாதாரணமாம்.காய்ந்த மிளகாயை புளியுடன் அரைத்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து வைத்திருப்பார்களாம்,இதை தான் கஞ்சியின் மேல் ஊற்றி சாப்பிட வேண்டுமாம்.காலையில் பூரி,இட்லி,தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த புழு பூத்த கஞ்சி மிகப்பெரிய தண்டனைதான் இல்லையா.தியாகம் செய்துவிட்டு வந்தாலும்,திருடிவிட்டு வந்தாலும் காலை உணவு இந்த கஞ்சி தான்.மதியம் 12 மணிக்கு மதிய சாப்பாடு.அரைகஞ்சியுடன் வடித்து,வட்டாவில் நிரப்பி அடைத்து வைத்திருக்கும் அந்த சோறு தான் மதிய சாப்பாடு.இதை தான் அச்சி சோறு அல்லது படி சோறு என்பார்கள்.இதற்க்கு சாம்பார்,ரசம் என்று கொடுப்பார்களாம் ஆனால் அது சாம்பாரும் இல்லை,ரசமும் இல்லை.மதியம் கொடுத்த உணவு தான் இரவும்.அதுவும் 5.30 மணிக்கே கொடுத்து முடித்து 6 மணிக்கெல்லாம் உள்ளே அடைத்துவிடுவார்கள்.ஜெயிலுக்குள் பேப்பர் வரும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்,ஆனால் அது முழு பேப்பராக இருக்காது.ஆங்காங்கே கத்தரி போடப்பட்டிருக்கும்.பொது செய்திகள் தவிர வேறு செய்திகள் கைதிகளுக்கு தெரிந்த்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் இந்த கத்தரி வேளை. இப்படி கொடுமைகள் இன்னும் ஏராளம்.அவற்றை நீங்கள் இந்த புத்தகத்தை படித்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிறையினுள் பணம் இருந்தால் எதுவும் சாத்தியமே.ஆனால் அவர்களுக்கு நேர்காணலின் போது கொடுக்கப்படும் பணம் கூட முழுவதுமாய் அவர்களிடம் போய் சேர்வதில்லை.சிறைக் காவலர்கள் அதில் கமிஷன் எடுத்துக்கொண்டு மீதியை தான் தருவார்களாம்.ஜெயிலில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சோகம்,அழுகை,கஷ்டம் இப்படி ஒவ்வொரு கதைகள்.சிறைக்குள் இருக்கும் தண்டனையை விட உறவினர்களை நேர்காணலில் சந்திப்பது தான் மிகக்கொடுமை.நேர்காணல் நடக்கும் இடம் ஒரு மிகச்சிறிய அறை.ஒரே நேரத்தில் 100 பேர் அந்த அறைக்குள் பேசினால் எப்படி இருக்குமோ,அப்படி தான் இருக்குமாம் அந்த நேர்காணல் அறையும்.கைதிக்கும்,பார்வையாளருக்கும் இடையே 1 மீட்டர் இடைவெளி,இரண்டு பேருக்கும் இடையே 2 கம்பிவலை,வந்தவரை சரியாக பார்க்க முடியாது,சத்தமாக பேசினால் தான் ஒருவர் பேசுவது மற்றவருக்கு கேட்குமாம்.சிறையில் இருக்கும் வார்டன்கள் கூட அங்கு இருக்கும் ஆயுள் கைதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வருடத்திற்க்கு 15 நாள் லீவு இருக்கிறதாம்.இந்த லீவையும் அவ்வளவு சுலபத்தில் எடுத்துவிட முடியாது.கைதிகளின் வீட்டில் ஏற்படும் மரணங்கள்,முக்கிய உறவினர்கள் திருமணம்,அதிகப்படியான உடல் நலக்குறைவு இதற்காகத்தான் எடுக்க முடியும்.அதுவும் ஒட்டுமொத்தமாக அல்ல,முதலில் 6 நாள்,பிறகு 3,3,3, இப்படித்தான் எடுக்க முடியுமாம்.சிறையின் உள்ளே ரெமிஷன் ஆபிஸ் என்ற ஒரு இடம் உள்ளது இங்கு தான் கைதிகளின் விவரம் அனைத்தும் இருக்கும்.

கைதிகளை ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவதை "கமான்" என்று சொல்வார்களாம்.சிறையில் கலகம் செய்பவர்கள்,கோஷம் போடுபவர்கள்,உரிமைகள் கேட்டு போராட்டம் செய்பவர்கள் இவர்களைத்தான் கமான் செய்வார்களாம்.வேறு சிறைக்கு மாறுவதன் மூலம் புதிய இடம்,பழகாத கைதிகள் ஆகியவற்றால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள்.அதற்க்குத்தான் இந்த இடமாற்றம்.சிறையில் இப்போது தான் அசைவம் எல்லாம் தருகிறார்கள்,ஆனால் நம் ஹீரோ ஜோதி இருந்த போதோ பெருச்சாலி தான் அசைவ உணவாம்.ஆம் பெருச்சாலியை பிடித்து அதன் மேல் மஞ்சல் பூசி அதை பொறித்து சாப்பிடுவார்களாம்.இது கூட எப்போதாவது தான் கிடைக்குமாம்.சிறையில் 15 நாளுக்கு ஒருமுறை திரைப்படம் காட்டுவார்களாம்.

பிரேமானந்தா,ஜான் டேவிட்,டாக்டர் பிரகாஷ்,பாக்ஸர் வடிவேலு,பழநெடுமாரன்,வைகோ இப்படி பல பிரபலங்களையும் அவர்கள் சிறையில் எப்படி இருப்பார்கள்,இருந்தார்கள் என்பதை யாருக்கும் பயப்படாமல் சொல்லியிருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு கொடூரமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்த நம் ஹீரோ ஜோதி என்ன ஆகிறார்,எதற்காக இரண்டாவது முறை சிறை செல்கிறார்.அங்கு அவருக்கு இந்த முறை கிடைக்கும் மரியாதை என்ன?.தன் வாழ்க்கையின் முதல் பகுதியை கொடூரமான விதத்தில் கழித்த நம் ஜோதி இரண்டாம் பகுதியை எப்படி வாழ்கிறார் என்பதை படித்துப்பாருங்கள்.முதல் முறையை விட இரண்டாவது முறை சிறை பல மாற்றங்களை அடைந்திருந்தது.இப்போது சிறையில் எல்லா வசதிகளும் இருக்கின்றனவாம்,முறைகேடாக எந்த வசதியையும் பெறலாமாம்.சிறைக்குள் செல்போன் உபயோகப்படுத்துகிறார்களே,அது எப்படி இவ்வளவு கெடு பிடிகளையும்,காவலையும் மீறி உள்ளே செல்கிறது என்பதை அறிந்துகொண்டால் மிரண்டு போய்விடுவீர்கள்.நானும் அப்படித்தான் மிரண்டுபோனேன்.
மனிதர்கள் குற்றம் செய்வதற்கான அடிப்படை என்ன?எந்த சூழ்நிலை அவர்களை குற்றவாளியாக்குகிறது.இப்படி பல கேள்விக்களுக்கான பதில்களும் இந்த புத்தகத்தில் உள்ளது.

புத்தகதை படித்து முடிந்த பிறகு பின் இணைப்புகள் வேறு கொடுத்திருக்கிறார் ஜோதி.கைது செய்யப்படுகையில் என்னென்ன நடக்கப்பட வேண்டும்,போலீஸ் காரர்கள் எப்படி நடக்கவேண்டும் என்றும்.சிறையின் உள்ளே கைதிகளின் உரிமைகள் என்னென்ன.எதற்கெல்லாம் அவர்கள் போராடலாம் என்றெல்லாம் தெளிவாகவும்,புரியும்படியும் சொல்லியிருக்கிறார்.கைதிகளை நேர்காணும் மனு,முதல் தகவல் அறிக்கை இவற்றின் மாதிரிகளையும் இணைத்திருக்கிறார்.

நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தனியொரு உலகம் அது.சிறைச்சாலை பற்றி திரைப்படங்கள் பதிவு செய்திருக்கும் பிம்பங்கள் அனைத்தும் போலியானவை.நிஜ சிறைச்சாலை நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.தங்களுடைய வளர்ச்சிக்காக சில அரசியல்வாதிகள் குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள்.வளர்ந்தவுடன் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி என்கவுண்டர் செய்துவிடுவார்கள்.அவர்களை பொறுத்த வரை ரவுடிகள் என்பவர்கள் ஒரு "யூஸ் அண்ட் த்ரோ" பொருள்.
இந்த புத்தகதின் கடைசியில் குறிப்பிடப்பட்ட வரிகள் இவை.நிச்சயம் இந்த புத்தகம் விரைவில் ஒரு திரைப்படமாக வெளிவரும்.பொருத்தமான நடிகர்,இயக்குனர் என்று நல்ல குழுவுடன் வந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத திரைப்படமாக அது அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

மொத்தத்தில் இந்த அடியாள் - ஒரு கைதியின் டைரி...

Monday, August 15, 2011

சுதந்திரம் - அடைந்துவிட்டோமா?.


நண்பர்களே இதுவரை நான் தொடர்ந்து ப்ளாக் எழுதவில்லை.இதுவரை 4 பதிவுகளை மட்டுமே எழுதியிருக்கிறேன்.ஆனால் இனி தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.அதன் தொடக்கமாக இந்த புனிதமான நாளில் என் ஆதகங்த்தையும்,நம் தவறுகளையும் திருத்திக்கொள்ள என்னுடய சிறு Requestஐ உங்கள் முன் வைக்கிறேன்.

சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் ஆகிவிட்டது.மனதை தொட்டு சொல்லுங்கள் நாம் முழு சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா?எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,தீவிரவாதம்,மெகா ஊழல்கள்,வறுமை,பஞ்சம்,பசி,பட்டினி, இன்னும் எத்தனையோ விஷயங்கள் தலைவிரித்து தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் வருடா வருடம் தில்லியிலும் சரி,நம் தமிழகத்திலும் சரி தலைவர்கள் கொடியேற்றி அறிக்கை விட்டு விட்டு அடுத்த வேலைக்கு (பழிவாங்க,மக்கள் பணத்தை சுரண்ட) தயாராகிவிடுகின்றனர்.இது நாட்டின் முதல் குடிமகன் தொடங்கி கடைகோடி வரை நடக்கிறது.

ஓட்டு போடவில்லை என்றால் 6 மாதம் தண்டனை,
ஓட்டு போட்டால் 5 வருடம் தண்டனை.சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை.

உண்மையில் நாம் முழு சுதந்திரம் அடைந்து விட்டோமா?.நம் முன்னோர்கள் வெள்ளையனிடமிருந்து அடிபட்டு,உதைபட்டு,குண்டடி பட்டு தங்கள் விலைமதிக்க முடியாத இன்னுயிரை விட்டது இதற்க்கு தானா?.சுதந்திரம் தரப்பட்டதல்ல,அவர்கள் தியாகத்தால் பெறப்பட்டது.வெள்ளையனிடமே அடிமையாய் இருந்திருந்தாலும் நன்றாகதான் இருந்திருப்போமே என்று என்னதோன்றுகிறதல்லவா.அப்படி இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா இந்நேரம் வல்லரசாகியிருந்திருக்கும்.இளைஞர்கள் கையில் இந்தியாவாம்,ஆனால் இன்று நாம் தான் அழிவுப்பாதையில் wheeling செய்து கொண்டு மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்.பாவம் நம் இளைஞர்களின் Hero என்று அழைக்கப்படும் டாக்டர்.A.P.J.அப்துல் கலாம்,இந்தியா வல்லரசாகிவிடுமென்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்.எனக்கு பகத்சிங்கும்,சுபாஷ் சந்திரபோஸும் ரொம்ப பிடிக்கும்.

பகத்சிங் அவர் பார்வையில் சுதந்திரம் என்ன என்பதை ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்,அந்த வரிகள் இதோ,
பாலுக்காக அழும் குழந்தை,
கல்விகாக ஏங்கும் சிறுவன்,
வேலைகாக அலையும் இளைஞன்,
வறுமையில் வாடும் தாய்,
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுதந்திர இந்தியா...

இன்று நாம் என்ன நடந்தாலும்,அதை பற்றி கவலைபடாமல் தான் உண்டு,தன் வேலை உண்டு என்று அவரவர் வேலையில் மும்முரமாய் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.பக்கத்து வீட்டில் இருப்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது,அந்த பிணத்தில் இருந்து வரும் துற்நாற்றத்தை வைத்தே தெரிந்துகொள்கிறோம் (இன்று பட்டிமன்றத்தில் ராஜா சொன்னது).இப்படி எது நடந்தாலும் அதை அடுத்த சில நாட்களிலேயே மறந்து விட்டு மறுபடியும் அவரவர் வேலையில் இறங்கிவிடுகிறோம்.இதை பற்றி நம் சுபாஷ் சந்திரபோஸ் அழகாக சொல்லி இருப்பார்.
உலகிலேயே மிகப்பெரிய குற்றம் அநீதிகளையும்,தவறுகளையும் சமரசம் செய்துகொள்வது.

இப்படி இவற்றை யாராவது ஒருவன் எங்காவது தட்டி கேட்டால் அவனை அன்னியன்,அம்மாஞ்சி,பைத்தியக்காரன் என்று சொல்லுகிறோம்.ஒரளவுக்கு மேல் போனால் அவனை தீவிரவாதி என்று பட்டம் கட்டி போட்டு தள்ளிவிடுகிறோம்.அதர்மம் தலை தூக்கும் போது கடவுள் நேராக வருவதில்லை இது போன்ற அன்னியங்களாகவும்,அம்மாஞ்சிகளாகவும்,பைத்தியக்காரர்களாகவும் தான் வருவார்.இதை உணர்வோம்.ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் நடந்துகொண்டாலே போதும் நல்லவை தானாகவே நடக்கும்.நாடும் செழிக்கும்.இது Advise அல்ல Request.

பெற்ற சுதந்திரத்தையும், பெறுவதற்க்கு பட்ட கஷ்டங்களையும் உணர்வோம், ஒழுக்கத்துடன் இருந்து உயர்வோம், நாடும் உயரும். ஜெய்ஹிந்த்...